2019ல் முதல் முறையாக ஹிமாச்சல பிரதேசத்திற்கு சென்று அங்குள்ள சில மலை வாசஸ்தலங்களை கண்டு திரும்பினேன். பனிச்சிகரங்கள், மேக மூட்டம் நிறைந்த சாலைகள், சில்லென்று பாயும் நதிகள், நீண்டு வளர்ந்த மலைகள் - இப்படி ரம்மியமான பல காட்சிகளையிடையே நிலச்சரிவுகள், பேராபத்தான பள்ளத்தாக்குகள், திகிலூட்டும் சாலைகள் போன்றவற்றவையும் கண்டேன்.
நான், என் மனைவி மற்றும் குழந்தைகளோடு சென்றது ஒரு சுற்றுலா. இமயமலையின் வடமேற்கு திசையில் சில பகுதிகளை பார்த்தபின் ‘இமயத்தின் கிழக்கு திசையில் பக்தி பயணம் சென்றால் என்ன?’ என அப்பொழுது ஒரு எண்ணம் தோன்றியது.
பல ஆண்டுகளுக்கு முன் அமரர். திரு. பரணீதரனின் (T.S. Sridhar/Marina) ‘பத்ரி கேதார் யாத்திரை’ புத்தகத்தை ஓரளவுக்கு படித்தது நினைவுக்கு வந்தது .
பாகீரதி, மந்தாகினி, அலக்நந்தா என பல பெயர்களில் அழைக்கப்படும் நதிகள் ஒன்றிணைந்து, கங்கை என்ற பிரபலமான பெயரோடு, மிக நீண்ட தூரம் பயணம் செய்து பல மாநிலங்களை கடந்து, வழிநெடுகிலும் நம் தேசத்தின் பக்தியையும் கலாச்சாரத்தையும் வளர்த்து, வங்கக்கடலில் கலப்பதையும் படித்து என் சிந்தனையில் ஒரு ஆசையை விதைத்தேன். அந்த விதை பயிராக 3 ஆண்டுகள் ஆயின. எனினும், முதல் அறுவடையே எனக்கு நல்ல நல்ல தெய்வீக அனுபவங்களை தந்தது.
இந்த காலகட்டத்தில் என் ஆசை கனவுகள் தினம் வளர்ந்தன.
நான் விதை செய்த பயிர் துளிர் விடத்தொடங்கியது ...... மே 2022ல்!
நமாமி கங்கே! - இந்த வீடியோ பாடலை பார்த்தபின், இமயத்தையும் அங்கு பொங்கிப் பாயும் நதிகளையும் காண வேண்டும், அங்கே உள்ள புண்ணிய ஸ்தலங்களையும் ஒரு முறை பார்த்தே ஆக வேண்டும் என பலமுறை சபதமேற்ப்பேன்.
போதாக்குறைக்கு, பரணீதரனின் பத்ரி கேதார் யாத்திரை புத்தகத்தையும் எடுத்து வைத்து கண்ணில்படும் பக்கங்களையும் படிப்பேன்.
என் கற்பனையில் பல காட்சிகள்.
‘திருநாளைப்போவார்’ போல் நானும் ‘ஒரு நாளை’ எதிர்பார்த்து ‘அந்த நாளும் வந்திடாதோ’ என ஆசையை வளர்த்து வந்தேன்.
ஒரு சில நிமிடங்கள் தான் மேற்கொண்டு பேசினோம். நல்ல நேரம் முடிவதற்குள் பந்தக்கால் நட்டு, எங்கள் இமாலய தரிசனத்திற்கு பிள்ளையார் சுழி போட்டு விட்டோம்!
இணையத்தின் மூலம் பல நபர்கள், டூரிஸ்ட் கம்பெனிகள், வாகன ஓட்டுனர்கள், விடுதி உரிமையாளர்கள் - இப்படிப் பல இடங்களில் விசாரித்து பார்த்தோம்.
அடுத்த சில தினங்களுக்குள் எங்கள் பயணக் குழுவில் என் மாமனாரும் ஷட்டகரும் உடன் வருவதாகச்சொன்னார்கள். என் கனவு உருவம் பெறத் தொடங்கிவிட்டது.
ஒரு பழைய நண்பர் ஹாலிடே டூர் பிளான் போட்டு, டூரிஸ்டுகளுக்கான தொகையைச் சொன்னார். எங்களுக்கோ கொஞ்சம் தயக்கம். யாத்திரைக்கான முதற்கட்ட வேலைகள், ஒரு பெரும் சவாலை ஹாலிடே டூருக்கான தொகையின் வடிவில் கண்டன.
என் மனைவி பல இடங்களில் கிடைத்த itinerary யை வைத்து “இவ்வளவு செலவாகலாம்…… ஆகையால் சுற்றுலாவாக இல்லாமல் பக்தி பயணமாக செல்லலாமே” என யோசனை சொன்னாள். அதுமட்டுமின்றி பயணத்திற்கான திட்டங்களில் என்னோடு சேர்ந்து கொண்டாள். என் கனவை நிஜமாகவே தனதாக்கிக்கொண்டு, “எங்கே தங்கலாம், சாப்பிடலாம், தரிசிக்கலாம்….” என்ற ரீதியில் தினசரி யோசிக்க தொடங்கினாள். விளைவு? சில தினங்களில் நாங்களே எங்கள் பயணத்திற்கான முழு வடிவத்தையும் கொடுத்து, அதை நெறிமுறை படுத்தி, நிறைவேற்றவும் தயாராகிவிட்டோம்.
ஜூன் முதல் வாரத்தில் எங்களுக்கு பலருடைய தொடர்புகள் கிடைத்துவிட்டன. விமானப்பயணம், ஹெலிகாப்டர் சவாரி, டெம்போ ட்ராவலர் யாத்திரை, ஹோட்டலில் சாப்பாடு என பல விஷயங்களை கருத்தில் கொண்டு முறையாக திட்டம் தீட்டினோம்.
பதினோரு பேர் கொண்ட பயணக்குழு. மூன்று வயோதிகர்கள் நான்கு குழந்தைகள் மற்றும் குழந்தைகளின் பெற்றோர்கள்.
வீட்டு சாப்பாட்டை சாப்பிட்டு பழகியவர்கள் வடநாட்டில் கிடைக்கும் உணவை எப்படி ருசிப்பார்கள்? தமிழ்நாட்டு உணவு கிடைப்பதே அங்கு அபூர்வமான விஷயம்.
கடுங்குளிரில் என்ன உடை அணிய வேண்டும்? வெந்நீர் கிடைக்குமா? காபி டீ கிடைக்குமா? அவசரத்திற்கு மருத்துவ உதவி கிடைக்குமா? என தினமும் ஒரு தலைப்பில் பேசிக்கொள்வோம்.
நாங்கள் விவரம் சேகரிக்கும் சமயத்தில், வேறு யாராவது ஒருவர் புது தகவல் தருவார். பெரும்பாலான சமயங்களில் அது ஒரு சுற்றுலா சார்ந்த விவரமாகத்தான் இருக்கும்.
திரு.பரணீதரனின் பயணக்கட்டுரைகளும் நாங்கள் இணையத்தில் பார்த்த புனிதத்தலங்களும் எங்களுக்குள்ளே வேரூன்றி, சுற்றுலாவுக்கு இடம் தராமல் ஆன்மிக பயணத்திற்கு துணை நின்றன.
நாங்கள் பயணத்திற்கு தேர்ந்தெடுத்த வேளை செப்டம்பர் மாதம் இறுதி வாரம் தான். எனினும், ஜூன் 9ஆம் தேதி, நாங்களாகவே விமான டிக்கெட்டுகளை பதிவு செய்தோம். டெல்லிக்கு சென்று, அங்கிருந்து ஹரித்துவார் சென்று அங்கிருந்து கங்கோத்ரி, கேதார்நாத் மற்றும் பத்ரிநாத் இம்மூன்றையும் தரிசிப்பதாக முடிவு செய்தோம். சுமார் 115 நாட்கள் விரதம் இருப்பது போல, ஒவ்வொரு நாளும் இமாலய தரிசனத்திற்கு எங்களை உடலளவிலும், மனதளவிலும் தயார்படுத்திக் கொண்டோம்.
எங்கள் விரதம் திருப்திகரமாக நிறைவேறியதையும் சற்று விவரமாக இந்த கட்டுரையில் சொல்கிறேன்.
உத்தராகாண்ட் மாநிலத்தில் யாத்திரை செய்ய நினைவில் வைத்துக்கொள்ள வேண்டிய விஷயங்கள்